Wednesday 27 July 2016

சாட்சியத்தினை மறைத்தல் (அ) குற்றவாளியினை காப்பாற்ற பொய்த்தகவல் அளித்தல்

பொய் என்று தெரிந்தே சாட்சியினை பயன் படுத்துதல் இந்திய தண்டனை சட்டம் 196 ன் கீழ் குற்றம்.
பொய் சான்றிதழ் அளித்தல் (அ) அதற்கு கையெப்பமிடுதல் இந்திய தண்டனை சட்டம் 197 ன் கீழ் குற்றம்.

குற்றத்திற்கான சாட்சியத்தினை மறைத்தல் (அ) குற்றவாளியினை காப்பாற்ற பொய்த்தகவல் அளித்தல் இந்திய தண்டனை சட்டம் 201 ன் கீழ் குற்றம். இவ்வாறான செயல்கள், மரண தண்டனைகளுக்குரிய குற்றமாக இருக்கும் பட்சத்தில், 7 ஆண்டுகள் வரையிலான சிறை & அபராதம். ஆயுள்தண்டனைகளுக்குரிய / 10 ஆண்டுகள் தண்டிக்கத்தக்க குற்றமாக இருக்கும் பட்சத்தில், 3 ஆண்டுகள் வரையிலான சிறை & அபராதம். 10 ஆண்டுக்களுக்கு கீழான சிறை தண்டனைக்குரிய குற்ற செயல்களாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு அதிக கால அளவிற்கு சிறை தண்டணை அளிக்க முடியுமோ அதில் 1/4 கால அளவில் சிறை & அபராதம்.


Friday 15 July 2016

பொய் சாட்சியம்.


பொய் சாட்சியம்.
பொய் என்று தெரிந்தே அது குறித்து சாட்சியாக இருப்பதும், பொய் சாட்சியங்களுக்கான ஆவனங்களை தயாரிப்பதும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 191 & 192 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

"அ" என்பவரின் கையெப்பம்தான் இது என "ஆ" என்பவர் அறிந்த நிலையில் பொய் சொல்வது பொய் சாட்சியாகும்.

"அ" என்பவரின் கையெப்பம் பற்றி அறிந்த "ஆ" என்பவர் ஒரு குறிப்பிட்ட கையெப்பத்தினை "அ" வின் கையெப்பம் என தான் நம்புவதாக சொல்வது "ஆ" வின் நம்பிக்கை பொறுத்த மட்டில் உண்மை என்பதால், ஒரு வேளை அது "அ" வின் கையெப்பமாக இல்லாமல் போனாலும் "ஆ" சொல்லியது பொய் சாட்சியமாக ஆகாது.

பொய் சாட்சியத்திற்கான தண்டனை
இந்திய தண்டனை சட்ட பிரிவு 193 ன் கீழ்,  நீதி மன்ற நடவடிக்கையின் எந்த ஒரு கட்டத்திலும் உட்கருத்துடன் பொய் சாட்சியம் தருகின்ற / பொய் சாட்சியம் புனைகின்ற ஒருவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

மற்ற சந்தர்ப்பங்களில்,  உட்கருத்துடன் பொய் சாட்சியம் தருகின்ற / பொய் சாட்சியம் புனைகின்ற ஒருவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

Wednesday 13 July 2016

அரசு (பொது) ஊழியர்களால் செய்யப்படும் / சம்மந்தப்பட்ட குற்றங்கள்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 166
ஒரு அரசு ஊழியர், சட்டப்படி தான் செய்ய வேண்டிய கடமையினை செய்யாமலிருப்பது ஓர் ஆண்டு வரை சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 167

ஒரு பொது ஊழியர் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான ஒரு ஆவணத்தையோ / மொழி பெயர்ப்பையோ உருவாக்குவது 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

நேரடியாக பெறுதல் மட்டுமே லஞ்சம் அல்ல...

"அ" என்ற வங்கியருக்கு சாதகமாக வழக்கை முடிவு செய்வதற்காக "ஆ" என்ற நீதிபதி தனது சகோதருக்கு ஓர் வேலையினை "இ" என்பவரிடமிருந்து கேட்டு பெறுகின்றார் என்றால் இதுவும் லஞ்சமே.

Monday 11 July 2016

உடந்தையாயிருத்தல் பற்றி..

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 107

1. ஒரு செயலை செய்ய தூண்டுதல்.
2. ஒரு செயலை செய்ய ஒருவரோ/ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாலோ சதி திட்டம் தீட்டப்படுதல்.
3. செய்யப்பட வேண்டிய செயலை செய்யாமல் சட்ட விரோதமாக‌ விடுவிப்பு செய்தல்.
இவை அனைத்தும் அந்த செயலிற்கு உடந்தையாக இருந்துள்ளார் என பொருள் கொள்ளப்படும்.
இவை மட்டுமல்ல.. வேண்டுமென்றே தவறாக திரித்து கூறுவதன் மூலம் தாம் வெளிபடுத்த வேண்டிய  முக்கியமான விழயத்தை வேண்டுமென்றே மறைத்தல் என்பது கூட உடந்தையாயிருந்தல் என்பதே ஆகும்.
உதாரணம்:
"அ" என்பவரை கைது செய்ய  நீதிமன்ற வாரண்ட் பெற்ற "ஆ" என்ற பொது அலுவலரிடம், "இ" என்பவர் வேண்டுமென்றே "ஈ" என்ற அப்பாவியினை "அ" என்று தவறாக அடையாளங்காட்டி கைது செய்ய துண்ட செய்கின்றார்.
இந்த செயலில் "இ" என்பவர் உடந்தை குற்றம் செய்தவராகின்றார்.


Tuesday 5 July 2016

தற்காப்பு உரிமை பற்றி சட்டம் என்ன சொல்கின்றது?

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 96,97, 98 ஆகியவைகள்,உங்களின் / வேறு எவருடையது உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் எந்த ஒரு செயலிலிருந்தும் தற்காத்துக்கொள்ள‌  செய்யப்படும் எந்த ஒரு செயலும் குற்றமல்ல. அதே போல உடமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கும் இந்த தற்காப்புரிமை செல்லும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 99 மேற்படி தற்காப்பு உரிமை என்பது ஒரு பொது ஊழியரால் செய்யப்படும் போது தற்காப்புரிமை அளிக்கப்படவில்லை என கூறுகின்றது. ஆனால் அவர் நல்லெண்ணத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்கின்றது சட்ட பிரிவு.


நான் கூட சில நாட்களுக்கு முன் தற்காப்புரிமை சட்ட விதி 96, 97 னை பொது ஊழியர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த சட்ட பிரிவு 99 தடையாக உள்ளது என சொல்லியுள்ளேன். ஆனால், சட்ட பிரிவு 99 னை சற்று ஆழ்ந்து நோக்கும் போது, அவ்வாறு செயல்படும் பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செயல்படும் என்ற ஒரு வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ள்ளதை கவனித்தேன்.  உரிய எச்சரிக்கையும், கவனத்துடன் செயல்படுதலையே நல்லெண்ணம் என கொள்ள இயலும் என‌,  இந்திய தண்டனை சட்ட பிரிவு 52 ன் கீழ் சொல்லப்பட்டுள்ளதால், பொது ஊழியர் சட்டத்திற்கு விரோதமாக, நல்லெண்ணத்துடன் செயல்படாத போது, அவருக்கு எதிராகவும் இந்த தற்காப்புரிமையினை உபயோகப்படுத்தலாம் என அறிய முடிகின்றது

Sunday 3 July 2016

குற்ற செயல்களில் விதி விலக்குகள்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 81 - வேறு அதிகப்படியான தீங்கை தடுப்பதற்காக செய்யப்படும் குற்றமுறு உட்கருத்தில்லாமல் செய்யப்படும் செயல் குற்றமல்ல.

உதாரணமாக, ஒரு டிரைவர் தன்னுடைய வண்டியின் கட்டுப்பாடிழந்து, எதிரில் உள்ள வேனின் மீது மோதுவதானால் அந்த காரில், 10 பேர் உயிரிழப்பார்கள் என்பதனை உண்ரும் டிரைவர் அதனை தவிர்க்க அதனருகில் இருக்கும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதினால் 2 பேர்தான் உயிர்ழப்பார்கள் என்ற நிலையில் தவிர்க்கவே இயலாத நிலையில் அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோத செய்வது குற்றமாகாது.
இந்திய தண்டனை சட்ட பிரிவு 82 - ஏழு வயதுக்குட்பட்ட‌ குழந்தையின் செயல் குற்றமல்ல.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 83. - ஏழு வயதுக்குட்ப‌ட்ட 12 வயதிற்குட்பட்ட தன் நடத்தையின் தன்மை, அதன் விளைவுகளை அறிந்து கொள்ளும் பக்குவமில்லாத குழந்தையின் செயல் குற்றமல்ல.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 84 - புத்தி சுவாதினமில்லாதரின் செயல் குற்றமல்ல.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 85 - விருப்பத்திற்கு மாறாக அளிக்கப்பட்ட குடி போதை காரணமாக செய்யப்படும் செயல் குற்றமல்ல.


இந்திய தண்டனை சட்ட பிரிவு 86. விருப்பத்திற்கு மாறாக அளிக்கப்படாத  குடி போதை காரணமாக செய்யப்படும் செயல் குற்றமே.

சற்று கவனிக்கப்பட வேண்டிய இந்திய தண்டனை சட்ட பிரிவு 80

இந்திய தண்டனை சட்ட பிரிவு 80 - சட்டப்பூர்வமான ஒரு செய்கையை செய்கையில் ஏற்படும் தற்செயல் நிகழ்ச்சி குற்றமல்ல.

அதாவது, ஒருவர், கைக்கோடாரியுடன் வேலை செய்கின்றார், திடீரென கோடாரியின் தலைப்பாகம் கழன்று போய் அருகில் நின்று கொண்டிருந்தவரை கொன்று விட்டது என்றால் அது மன்னிக்க முடியாத குற்ற செயல் அல்ல.

ஆனால், இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு உட்கருத்து உள்ளது, அது என்னவென்றால்,  இந்த செயல் நிகழ்வதற்கு முன் அது குறித்து எந்த ஒரு எச்சரிக்கையும் அவருக்கு யாராலும் அளிக்கப்படாமலிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு எச்சரித்த பின்னும், அவர் கோடாரியினை சரி செய்யாமல் வேலை செய்து இந்த மரணம் நிகழ்ந்தால் அது குற்றமாகும்.

இதில் வழக்குறைப்பவரின் வாத திறமை மற்றும் சாட்சிகளை விசாரித்தல் மற்றும் சாட்சியங்களை சேகரித்தல் மூலமே நியாயமும், அநியாயமும் கிடைக்கும்.


தவறான தீர்பினை அளிக்கும் நீதிபதியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலுமா?

தவறான தீர்பினை அளிக்கும் நீதிபதியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலுமா?


இந்திய தண்டனை சட்ட பிரிவு 77 ன் கீழ் தமக்கு சட்டத்தின் படி கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி நீதி முறையில் செயல்படும் போது அவரால் செய்யப்டுகின்ற எதுவும் குற்றம் அல்ல.

எனவே, தவறான தீர்பினை அளிக்கும் நீதிபதியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என்பதே இந்த சட்டத்தின் படி சொல்லப்பட்டுள்ள சங்கதியாகும்.

உங்கள் புகார் பதிவு செய்ய மறுக்கப்பட்டால்

காவல் நிலையத்தில் அளித்தாலும், மாவட்ட கண்காணிப்பாளருக்கு அளித்தாலும், புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர்  வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.  மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.

இதை தவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 2(4) ன் கீழ் முறையீடாகவும், சட்டப்பிரிவு 2(7) ன் கீழ் பரிசீலனை மனுவாகவோ, சட்டப்பிரிவு 190 (1-அ) கீழ் விசாரிக்கச்சொல்லியோ, சட்டப்பிரிவு 200 ன் கீழ் புகார் மனுவாகவோ குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அளிக்கலாம்

Saturday 2 July 2016

காவல்துறையில் புகார் அளிப்பது குறித்த விளக்கங்கள்

காவல்துறை செயல்பாடுகள்.

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences),  நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு (Non Cognizable Offences) களாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை,வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences)கருதப்படுகின்றன.

இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன் மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்  காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.

எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள (கைது செய்வதற்கு உரிய) (Cognizable Offences) வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154 படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (2) ன் கீழ்
முதல் தகவல் அறிக்கை (First Information Report)  நகல் ஒன்றினை இலவசமாக புகார்தாரருக்கு அளிக்க வேண்டும். 

கைது செய்வதற்கு உரியதல்லாத  (Non Cognizable Offences) புகார் எனில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 155 ன் கீழ் புகாரினை பெற்றுக்கொண்டு நீதி மன்றத்திற்கு செல்ல சொல்லி காவல்துறை அறிவுரை சொல்ல வேண்டும்.

காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள (கைது செய்வதற்கு உரிய)  (Cognizable Offences) உங்களின் புகாரினை காவல்நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தால் / அலைய விட்டால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரிதானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.


அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால்... என்ன செய்யலாம்? அடுத்த பதிவில் பார்கலாம்.

காவல்துறை செயல்பாடுகளை சற்று அறிந்து கொள்வோம்.

காவல்துறை செயல்பாடுகளை சற்று அறிந்து கொள்வோம்.

வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை நமது பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள் (Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) என இருவகையாக பிரிக்கலாம்.

பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம்.
இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மையாக மாறிவிடும்.


குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை  இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.  பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.

Friday 1 July 2016

நீதிபதிகளின் அதிகாரங்களை அறிவோமா?

நீதிபதிகளின் அதிகாரங்களை அறிவோமா?


மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.
இந்நீதிமன்றம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 11(3) ன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நீதிமன்றமாகும்.
இவ்வாறு அழைக்கப்படுவது தாலுகா அளவிலுள்ள நீதிமன்றங்களாகும். பொதுவாக "மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்" குறிப்பிடுவார்கள்.
இந்நீதிமன்ற நீதிபதியினை இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் என அழைக்கபடுபவர். இவர் தமக்கு அதிகாரமுள்ள குற்றவியல் & உரிமையியல் வழக்குகளையும் விசாரிக்க முடியும். குற்றம் பற்றிய விசாரணையும் செய்யும் அதிகாரமுள்ளது.
இந்த நடுவருக்கு, குற்றவியலைப்பொருத்த வரை அதிகபட்சம் ஓராண்டு சிறை / ரூ.1000 அபராதம் / இரண்டும் விதிக்கும் அதிகாரம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 29(3) கீழ் வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நடுவர் மன்றம்.

இந்நீதிமன்றம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 11(1) ன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைக்கப்படுவதும் தாலுகா அளவிலுள்ள நீதிமன்றமேயாகும். ஆனால், இந்த நீதி மனறத்தில் குற்றவியல் வழக்கு மட்டுமே நடத்தப்படும். இந்நீதிமன்ற நீதிபதியினை இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் என அழைக்கபடுவார்.
இவர் தமக்கு அதிகாரமுள்ள இடத்தில் குற்றம் பற்றிய விசாரணையும் செய்யும் அதிகாரமுள்ளது.
இந்த நடுவர், அதிகபட்சம் ஓராண்டு சிறை / ரூ.1000 அபராதம் / இரண்டும் விதிக்கும் அதிகாரம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு : 29(3) கீழ் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களைப்பற்றி கொஞ்சம் விபரமாக அறிந்து கொள்வோம்.

நீதிமன்றங்களைப்பற்றி கொஞ்சம் விபரமாக அறிந்து கொள்வோம்.
கிரிமினல் கோர்ட் என அழைக்கப்படும் குற்றவியல் நீதிமன்றம்.
சிவில் கோர்ட் என அழைக்கப்படும் உரிமையியல் நீதிமன்றம்.
இந்த இரண்டு வகைகளை பல பிரிவுகளாக கொண்ட நீதிமன்றங்கள் உள்ளன.
இதில், குற்றவியல் பிரிவில் மாவட்டம் மற்றும் மாநகரம் என பிரிக்கப்பட்டு அதிலும் பல பிரிவுகள் அடங்கிய நீதிமன்றங்கள் உள்ளன.

1. மாவட்ட நீதிமன்ற வகைகள்:
1. மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்
2. நீதித்துறை நடுவர் மன்றம்.
3. சிறப்பு நீதித்துறைக்குற்றவியல் நடுவர் மன்றம்.
4. முதன்மை குற்றவியல் நடுவர் மன்றம்.

2. மாநகர‌ நீதிமன்ற வகைகள்:
1. மாநகர குற்றவியல் நீதிமன்றம்.
2. மாநகர சிறப்புக்குற்றவியல் நடுவர் மன்றம்.
3. பெருநகர முதன்மை  குற்றவியல் நடுவர் மன்றம்.

அது என்ன நீதிபதி என்றும் நடுவர் என்றும் இரு பெயர்கள்?

கீழமை நீதிமன்றங்களுக்கும் மேலான நீதிமன்றங்களில் நீதிபதி என்றே அழைக்கபடுவார்கள்.
கீழமை நீதிமன்றங்களில்... கிரிமினல்  வழக்குகளை விசாரிப்பவர் "நடுவர்"" என்றும், "சிவில்" வழக்குகளை விசாரிப்பவர் "நீதிபதி" என்றும் அழைக்கபடுவார்கள்.

3. தண்டனைகள் (அத்யாயம்(CHAPTER) - 3)

இ.த.சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு அளிக்கபட அனுமதிக்கப்பட்டுள்ள தண்டனைகள்:

1. மரணம்.
2. ஆயுள் சிறை
3. (1949 ல் நீக்கப்பட்டுவிட்டது)
4. இருவகையுள்ளது. 1. கடுங்காவல் (கடுமையான உழைப்புடன்). 2. மெய்காவல்.
5. சொத்தின் தண்ட இழப்பு
6. அபராதம்.

மரண தண்டனை / ஆயுள் தண்டனைகளில் அரசுகள் மாற்றம் செய்ய இயலுமா?    ஆம். இயலும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 54 ன் கீழ் "மரண தண்டனை" விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அவர்களின் அனுமதியில்லாமல் இச்சட்டத்தால் வகை செய்யப்பட்டுள்ள வெறெந்த தண்டனையாகவும் மாற்ற "மத்திய அரசு"க்கு அனுமதியுள்ளது.


இந்திய தண்டனை சட்ட பிரிவு 55 ன் கீழ் "ஆயுள் தண்டனை" விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அவர்களின் அனுமதியில்லாமல்14 ஆண்டுகள் மேற்படாத வெறெந்த தண்டனையாகவும்  மாற்ற "மாநில‌அரசு"க்கு அனுமதியுள்ளது.